குற்றம்

"அரசு மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை நடக்கவில்லை"- ஈரோடு சுகாதார அதிகாரி விளக்கம்

நிவேதா ஜெகராஜா

ஈரோட்டில் தாயே தனது 16 வயது மகளின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரம் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுபோன்ற தவறான செய்கைகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கவில்லை என ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் கோமதி தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்ற வழக்கில் சிறுமியின் தாய் இந்திராணி என்பவரும், அவரது 2வது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டு ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சிறுமிக்கு 3 வயதுள்ளபோது கணவர் சரவணன் பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவதாக சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் தாய் இந்திராணி. இவர் ஏற்கெனவே கருமுட்டை விற்கும் தொழில் செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக, தையல் தொழிலாளியான மாலதி என்பவர், இடைத்தரராக செயல்பட்டு வந்துள்ளார். இவர்கள் இணைந்து இதுவரை சிறுமியிடம் இருந்து 8 முறை கருமுட்டையை தருமபுரி, ஒசூர், ஈரோடு, சேலம் மருத்துவமனைகளுக்கு விற்ற வந்துள்ளது தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில் மீண்டும் சிறுமியிடம் கருமுட்டை எடுக்க தயாரானபோது சிறுமி சேலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று 3 நாள்கள் தங்கி விபரங்களை தெரிவித்திருக்கிறார். அங்கு அவர்கள் சம்பவத்தின் தீவிரத்தை அறிந்து, அங்கிருந்த சிறுமியின் சித்தப்பா ஞானசேகரனுடன் சிறுமியை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க அனுப்பியுள்ளனர். இவர்கள் கடந்த ஜூன் 1ம் தேதி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டத்தில் சிறுமியிடமிருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அனுமதியின்றி, சிறுமியொருவரின் கருமுட்டை தானம் செய்தது மட்டுமன்றி, சிறுமிக்கு தந்தை இடத்தில் இருக்கும் இந்திராணியின் 2 வது கணவர் சையத்அலி, அவரை பாலியில் தொந்தரவும் செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து, சிறுமியின் கருமுட்டையை தலா ரூ.20 ஆயிரத்துக்கும், புரோக்கர் கமிஷனாக ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திராணி, சையத் அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஈரோடு சுகாதாரப் பணி இணை இயக்குநர் கோமதியிடம் கேட்டபோது, ``அரசு மருத்துவமனையில் இது போன்று நடக்க வில்லை, தனியார் மருத்துவமனையில் நடந்தது பற்றி எங்களுக்குத் தெரியாது” என்றார்.