குற்றம்

ஈரோடு: போலீஸ் உடையில் காவல் நிலையம் அருகே சுற்றித்திரிந்த போலி எஸ்ஐ கைது

kaleelrahman

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே போலீஸ் எஸ்ஐ உடையுடன் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்த போலி எஸ்ஐ கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊரக காவல் நிலையம் அருகே போலீஸ் எஸ்ஐ உடையில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் போலீஸ் எஸ்ஐ உடையில் சுற்றும் போலி எஸ்ஐ என தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர், ஈரோடு மாவட்டம் நம்பியூர் நாடார் தெருவைச் சேர்ந்த ஆனந்த குமார் என கூறியுள்ளார். மேலும் தான் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரியில் எம்எஸ்சி படித்துள்ளதாகவும். தற்போது நம்பியூர் பஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நகர காவல் துணை ஆய்வாளர் சுரேஷ் இவர் போலி எஸ்ஐ என்பதை உறுதிபடுத்தி வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சௌமியா மேத்யூ போலியாக எஸ்ஐ உடையில் வலம் வந்த ஆனந்த குமாரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்