செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கத்தில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த விஜயன், சத்தியமூர்த்தி மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோர் வங்கிக் கணக்கு ஆவணங்களை 2500 ரூபாய்க்கு பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் தனது வங்கிக் கணக்கு ஆவணங்களை மூவரிடம் வழங்கி பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், மூன்று இளைஞர்களும் ஆவணங்களைப் பெற்று மோசடியில் ஈடுபடும் கும்பல் என ராமகிருஷ்ணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து நவம்பர் 30ம் தேதி ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து மூவரையும் சைபர் கிரைம் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருவாரூரைச் சேர்ந்த கௌதம் என்பவர் வங்கிக் கணக்கு ஆவணங்களை பெற்று தந்தால் அதற்கு அதிகளவு பணம் தருவதாக கூறியதன் அடிப்படையில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து இரண்டு ஏடிஎம் கார்டுகள், இரண்டு காசோலை புத்தகங்கள், ஐ-போன் உள்பட ஆறு செல்போன்கள், 20க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 12,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து திருவாரூரைச் சேர்ந்த கௌதம் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.