குற்றம்

”என் மனைவி இன்னொருவருடன் ஓடிட்டா” - சோக முகத்துடன் நம்பவைத்த கணவர்; போலீஸ் கொடுத்த ஷாக்!

Sinekadhara

கேரளாவில் மனைவியை கொன்றுவிட்டு வேறொருவருடன் ஓடிப்போய்விட்டதாக நாடகமாடி, இரண்டாம் திருமணத்துக்கு ஆயத்தமான நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஜீவ். இவருடைய மனைவி ரம்யா 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஞாராக்கல் காவல்நிலையத்தில் மனைவி காணாமல் போய்விட்டதாக புகாரளித்துள்ளார் சஜீவ். மேலும் உறவினர்களிடமும் தனது மனைவி வேறொருவருடன் ஓடிப்போய்விட்டதாகவும், தான் தனியாக வசித்துவருவதாகவும் சோக முகம் காட்டியிருக்கிறார்.

மனைவி மாயமாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆனநிலையில், இரண்டாம் திருமணத்துக்கு ஆயத்தமாகியுள்ளார் சஜீவ். இதற்கிடையே பலமுறை போலீசார் விசாரணைக்கு அழைத்தும் அதனைக்குறித்து அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. மேலும் போலீசாரின் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றும் தெரிகிறது. போலீசார் தன்னை நம்பிவிட்டதாகவும், தன்னை கண்டுகொள்ளவில்லை எனவும் நினைத்திருந்த சஜீவிற்கு திடீரென அதிர்ச்சி கொடுத்தனர் போலீசார். சஜீவை தொடர்ந்து கண்காணித்ததில் அவரே ரம்யாவை கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது.

சஜீவை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதில், ஒரு குடும்ப சண்டையில் ரம்யாவை கொடூர கொலைசெய்த சஜீவ், வீட்டு வளாகத்திற்குள்ளேயே புதைத்துவிட்டு, அதே வீட்டிலேயே வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ரம்யாவின் உடலை புதைத்த இடத்தை தோண்டியதில், உடற்பாகங்கள் கிடைத்துள்ளன. கொலை குற்றம் மற்றும் ஆவணங்களை அழித்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஜீவ் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.