கர்நாடகாவில் கல்லூரி மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu என்ற ஹேஷ்டேக்கும் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் பகுதியிலுள்ள வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் ஒருவரின் உடலை காவல்துறையினர் மீட்டனர். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 23 வயதான பொறியியல் கல்லூரி மாணவி கடந்த 13ம் தேதி காணாமல் போனதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 16ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
மாணவி தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலை கடிதமொன்றும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியை கட்டாயமாக சிலர் தற்கொலை கடிதம் எழுத வைத்து கொலை செய்துள்ளதாக மாணவியின் நண்பர்களும், உறவினர்களும் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டம் காரணமாக போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். இது குறித்து ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவியின் உயிரிழப்பு குறித்து தீவிர விசாரணை வேண்டுமென சமூக வலைத்தளங்களிலும் #JusticeforMadhu என்ற ஹேஷ்டேக்கும் பரவி வருகிறது.
விசாரணைக்கு பின்னரே மாணவி கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலைதான் செய்துகொண்டாரா என்று தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.