குற்றம்

வரதட்சணை புகார்: விசாரணைக்குச் சென்ற பெண் காவலரை திட்டியதாக சகோதரர்கள் கைது

kaleelrahman

வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் விசாரணைக்காக கணவனை அழைக்கச் சென்ற போலீசாரிடம், தகாத முறையில் பேசிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்னி. இவருக்கும் கடலூர் மாவட்டம் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்னி, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், திருமணத்தின்போது அஸ்னிக்கு கொடுக்கப்பட்ட நகை பணம் ஆகியவற்றை சக்திவேல் பறித்துக் கொண்டதாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக இரண்டு முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைக்க விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த கயல்விழி என்ற பெண் காவலர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்திற்கு சென்று சக்திவேலை அழைத்துள்ளார்.

அப்போது சக்திவேல் மற்றும் அவரது சகோதரர் சண்முகம் ஆகியோர் காவலர் கயல்விழியை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் சக்திவேல் மற்றும் சண்முகம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்