குற்றம்

DOLO 650 பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி பரிசளிப்பு- நீதிபதிகள் அதிர்ச்சி

நிவேதா ஜெகராஜா

'டோலோ 650' மாத்திரையை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு அந்நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை பரிசுபொருள்களாக கொடுத்துள்ளது. இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் தகவல்.

இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில், விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் நடைமுறைக்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, காய்ச்சலுக்கு அளிக்கப்படும், 'டோலோ 650' மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்பதற்காக, அந்நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாயை மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தெரிவித்தார். இதை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது கூட தனக்கு அந்த மாத்திரைகள் தான் பரிந்துரைக்கப்பட்டதாகவும், இது மிக தீவிரமான பிரச்னை எனவும் நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். மேலும் உடனடியாக இவை கவனிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.