குற்றம்

திருமணத்தை மீறிய உறவால் வந்த பிரச்னை... பெண்ணை டவலை வைத்துக் கொன்ற மருத்துவர்..!

Sinekadhara

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் இஸ்மாயில். இவர் தாஸ்னா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக க்ளினிக் வைத்து நடத்திவருகிறார். இவரிடம் 33 வயதான பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்திருக்கிறார். அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டதாக அந்தப் பெண்ணின் கணவர் காசியாபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஒருமாதமாகத் தேடியும் போலீஸாரால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அண்டை மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றனர்.

அக்டோபர் 15ஆம் தேதி ஹரியானா மாநில காவல்துறையினர், காசியாபாத் காவல்துறையினரைத் தொடர்புகொண்டிருக்கின்றனர். குருஷேத்ராவில் ஒரு உடலைக் கண்டெடுத்ததாகவும், பரிசோதனையில் அதன் அடையாளங்கள், அந்தப் பெண்ணுடன் ஒத்துப் போவதாகவும் கூறியிருக்கின்றனர். அதன்பிறகு அந்தப் பெண்ணின் செல்போன் கால் ரெக்கார்டுகளை சோதித்துப் பார்த்தபோது, மருத்துவர் இஸ்மாயில்மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே அவரை விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில், அந்தப் பெண்ணை கொலைசெய்ததை ஒத்துக்கொண்டிருக்கிறார்.

மேலும் விசாரித்தபோது, அந்த பெண் தன்னுடன் ஒன்றாக வசிக்கும்படி இவரை தொந்தரவு செய்திருக்கிறார். தனக்கு ஏற்கெனவே திருமணமாகி குடும்பம் இருப்பதாகவும் கூறி இவர் மறுத்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீஸாரிடம் கூறியிருக்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி, அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் பஹர்கஞ்ச் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அந்தப் பெண் தூங்கும்வரை காத்திருந்து, அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். மறுநாள் காலை வாடகைக் காரில் அந்த ஹோட்டலுக்குச் சென்று, அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு இருவரும் சண்டிகர் செல்வதாகக் கூறியிருக்கிறார்.

செல்லும் வழியிலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண் ஆஸ்துமா நோயாளி என்பதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஊசி போடும்போது மயக்கமருந்தையும் சேர்த்துப் போட்டிருக்கிறார். அந்த பெண் மயங்கியவுடன் டவலை வைத்து அழுத்தி கொலை செய்திருக்கிறார். அங்கு யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் உடலை மறைத்து வைத்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கே திரும்பி வந்துவிட்டார். தன்மேல் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக எதுவுமே நடக்காததுபோல் க்ளினிக்கை நடத்தியிருக்கிறார் என்றும் போலீஸார் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு கொடுத்த தகவலில் தெரிவித்திருக்கின்றனர். இதனால் மருத்துவர்மீது கொலை குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.