குற்றம்

"அலைபேசி செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம்" - காவல்துறை எச்சரிக்கை

Veeramani

அலைபேசி செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னையில் அலைபேசி செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்யும் மோசடி கும்பல் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அதுபோன்ற செயலிகளை, ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இந்நிலையில், ப்ளே ஸ்டோர் மற்றும் இணையத்தளங்களில் அதேபோன்ற கடன் வழங்கும் செயலிகள் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கடன் வாங்கும்போது, கடன் தொகையில் 30 சதவிகிதம் செயல்பாட்டு கட்டணமாக வசூலிக்கும் அந்த கும்பல், அதிக வட்டி விதித்து பணம் வசூலிக்கிறது.

அந்த செயலியின் மூலம் அலைபேசியில் உள்ள தொடர்பு எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அபகரிக்கப் படுகின்றன. கடன்பெறுவோர் குறித்து தவறாகவும் ஆபாசமாகவும் அவர்களது நண்பர்கள், உறவினர்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்புகிறது. இதைத் தடுக்க பொதுமக்கள் இத்தகைய செயலிகளில் கடன் பெற வேண்டாமென சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.