குற்றம்

உட்கட்சி பூசலால் திமுக ஊராட்சி செயலாளருக்கு அரிவாள் வெட்டு

webteam

நாகை மாவட்டம் தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளரைக் கூலிப்படையை வைத்து தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த கொத்தங்குடியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கொத்தங்குடி திமுக ஊராட்சி செயலாளராக உள்ளார். மேலும் பூவைத்தேடி டாஸ்மாக் கடை விற்பனையாளராகப் பணிபுரிகிறார்.இந்நிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீடு திரும்பியபோது மர்ம நபர்கள் நான்கு பேர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து பூவைத்தேடி என்ற இடத்தில்  அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு வசந்தகுமாரை தாக்கியுள்ளனர். இதில்படுகாயமடைந்த வசந்தகுமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வசந்தகுமார் கூறுகையில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்ட நேர்காணலில் பங்கேற்றேன். அப்போது மாவட்ட  ஒன்றிய நிர்வாகம் சரியில்லை என ஸ்டாலின் முன்பாக கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகாகுமார் என்னை அடியாட்களை கொண்டு தாக்கியுள்ளார் எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து கீழையூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.