குன்றத்தூரில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில் மத்திய அரசு ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
குன்றத்தூர், சம்பந்தம் நகரைச் சேர்ந்தவர் பத்மகுரு (37). இவரது மனைவி சிந்து (30). இந்நிலையில், அதே பகுதியில் கோழி கறிக்கடை நடத்தி வரும் பத்மகுருவிற்கும், குன்றத்தூரைச் சேர்ந்த மீனா (29), என்ற பெண்ணுக்கும் பழக்கம், இருப்பதாகக் கூறி பத்மகுருவின் மனைவி சிந்து, மீனாவின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மீனா, அவரது கணவர் ரஜினி மற்றும் உறவினர்கள் பத்மகுருவின் வீட்டிற்கு சென்று இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பத்மகுரு கத்தியால் குத்தியதில் மீனாவின் உறவினர் குமரன் (33), விஷ்வா (19), ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
இதில், குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த விஷ்வா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார், உயிரிழந்த குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரன் ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.