accused
accused ptdesk
குற்றம்

திண்டுக்கல்: அண்ணனை கொன்று தூக்கில் தொங்கவிட்ட தம்பி, தங்கை... குடும்பத்தினர் 9 பேர் அதிரடி கைது!

webteam

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயியான இவர், மாடுகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இவர் படுகாயங்களுடன் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் தூக்கில் சடலமாக கிடந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

medical college hospital

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கண்ணன் அவரது நெருங்கிய உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை மறைக்க அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட இறந்தவரை தோட்டத்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இறந்த கண்ணனின் சகோதரி அழகி, அவரது கணவர் சின்னக்காளை, மகன் அழகர்சாமி, கண்ணனின் தம்பி முருகன், அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன்கள் சதீஸ்குமார், குணா மற்றும் உறவினர்கள் நாச்சம்மாள், வெள்ளைச்சாமி ஆகிய 9 நபர்களுக்கும் கொலையில் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது 2.5 ஏக்கர் சொத்துக்காக ஏற்பட்ட தகராறில் இந்த கொலையை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

police station

இதனை அடுத்து அவர்கள் 9 பேரையும் கைது செய்த சாணார்பட்டி போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.