குற்றம்

திண்டுக்கல்: தாயை கத்தியால் குத்திய தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற மகன்கள் கைது

திண்டுக்கல்: தாயை கத்தியால் குத்திய தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற மகன்கள் கைது

kaleelrahman

வத்தலக்குண்டு அருகே தாயை கத்தியால் குத்திய தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வனராஜ் (55). விவசாய கூலித் தொழிலாளியான இவர், குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி ஈஸ்வரியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த வனராஜ் ஈஸ்வரியை கத்தியால் குத்தியுள்ளார்.

ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த அவரது மகன்கள் முத்துசாமி, ஊர்காலன் ஆகியோர் ஓடிவந்து பார்த்தபோது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆத்திரமடைந்த அண்ணன் தம்பி இருவரும் சேர்ந்து தங்களது தாயை கத்தியால் குத்தி காயப்படுத்திய தந்தை வனராஜை கம்பு மற்றும் கட்டைகளால் தாக்கத் தொடங்கினர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் வனராஜ் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்து கணவன் மனைவி இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈஸ்வரி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பலத்த காயமடைந்த வனராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீசார், மகன்கள் முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.