செய்தியாளர்: காளிராஜன் த
தேனியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் லாரியில் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்.ஐ.ராதா தலைமையிலான போலீசார் செம்பட்டி, ஆத்தூர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் லாரி ஒன்று வேகமாக செல்ல முயன்றுள்ளது. உடனடியாக லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து லாரியை சோதனை செய்த போது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரி டிரைவர் விக்னேஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது, அவர் சேலம் எடப்பாடியைச் சேர்ந்தவர் என்றும், பெரியகுளத்தைச் சேர்ந்த தனியார் மில் உரிமையாளர் அன்வர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை குருணையாக தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் பெரியகுளம் சென்று அன்வரை கைது செய்தனர். மேலும் 19 டன் ரேஷன் அரிசியையும், லாரியையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.