குற்றம்

தருமபுரியில் தொழிலாளி கொலை: தலைமறைவானவர் கைது

ஜா. ஜாக்சன் சிங்

தருமபுரி அருகே கிரானைட் கம்பெனியில் பணியாற்றிய சக தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மேற்கு வங்க மாநில தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரியை அடுத்த மாரவாடி பகுதியில் கிரானைட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஆதித்யா சவுத்திரி (32), சங்கர் பசுன்யா(25) ஆகிய இரண்டு மேற்கு வங்க மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதியன்று இரவு மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆதித்யா சவுத்திரி, பாபாயை சுத்தியலால் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பாபாய் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆதித்யா அங்கிருந்து தலைமறைவானார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆதித்யா சவுத்ரியை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஆதித்யா சவுத்ரி பெங்களூரில் உள்ள ஒரு கல் குவாரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, பெங்களூர் சென்ற தனிப்படை போலீஸார், ஆதித்ய சவுத்ரியை கைது செய்து தருமபுரி அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.