குற்றம்

தருமபுரி: வீட்டின் பூட்டை உடைத்து 46 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல்

kaleelrahman

மொரப்பூர் பூங்கா நகரில் ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 46 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் பூங்கா நகரில் ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் கண்ணன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ஆம் தேதி சேலத்தில் இருக்கும் தனது மகன் குழந்தையை பார்ப்பதற்காக குடும்பத்தோடு சென்றுள்ளார்.

சேலத்திற்கு சென்றுவிட்டு இன்று தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று அறைகளில் இருந்த பீரோக்கள் மற்றும் கபோர்டுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு உள்ளிருந்த துணிகள் மற்றும் சில்லறை காசுகள் வெளியே சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து கண்ணன், மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மொரப்பூர் காவல் ஆய்வாளர் மஞ்சுளா கைரேகை நிபுணர்களை வைத்து ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் விசாரணை செய்து, அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறதா? அதில் ஏதேனும் காட்சிகள் பதிவாகியுள்ளனவா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.