குற்றம்

தருமபுரி: படித்தது பத்தாவது பார்த்தது மருத்துவம் - போலி டாக்டர் கைது

webteam

தருமபுரி அருகே பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலி மருத்துவ ஒழிப்பு குழுவினர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் துணையுடன் நாய்கன்கொட்டாய் பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்த கண்ணன் என்பவரிடம், உரிமை மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர்.

அப்போது கண்ணன் (60) தான் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டு கடந்த பத்தாண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தந்தை ஹோமியோ மருத்துவம் பார்த்து வந்தபோது அதை உடனிருந்து கற்றுக் கொண்டு தனது தந்தை இறந்த பின்னர் கடந்த பத்தாண்டுகளாக நோயளிகளுக்கு ஊசி போட்டும் மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கண்ணனை கைது செய்த கிருஷ்ணாபுரம் போலீசார், அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.