குற்றம்

`போக்சோ பதிய அவசரப்பட வேண்டாம்’- டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கை!

webteam

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

`உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதன்படி கீழ்காணும் அறிவுரைகள் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

i) திருமண உறவு, காதல் உறவு போன்றவற்றில் போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது

ii) அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.

iii) குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

iv) குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும்.

v) முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை) உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும். இந்த அறிவுரைகளை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்'' என்றுள்ளார்