குற்றம்

நாய்க்கடியுடன் அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Sinekadhara

குஜராத் மாநிலம் மேசானா பகுதியைச் சேர்ந்தவர் பிகா மிஸ்ட்ரி(வயது 46). திருமணமாகாத இவர் அஹமதாபாத்தில் இருக்கும் தனது சகோதரர் வீட்டில் தங்கி, ஒரு தொழிற்சாலையில் வேலைசெய்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, காணாமல் போய்விட்டதாக செப்டம்பர் 12ஆம் தேதி அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர்.

மூன்று நாட்கள் தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸார் உடலில் நாய்க்கடிகளுடன் அழுகிய நிலையில் ஒரு வயலில் குழந்தையின் உடலைக் கண்டுபிடித்தனர். விசாரணையைத் தொடங்கிய போலீஸாருக்கு பிகா மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்தபோது, குழந்தையை கொலைசெய்ததாக ஒத்துக்கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு போலீஸார் கொடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை 12ஆம் தேதி இரவு ஆட்டோவில் ஏற்றி ஆளில்லாத ஒரு வயற்காட்டிற்கு கொண்டுசென்றதாகவும், அங்கு பாலியல் ரீதியாக அவரை துன்புறுத்தியதாகவும், சிறுமி சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்துக் கொன்று அங்கிருந்த ஒரு புதருக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு வந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவுகள் 302 மற்றும் 376இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.