குற்றம்

ஈரோடு: காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுத்தவரின் வாகனம் எரிப்பு; கொலை மிரட்டல்

webteam

ஈரோடு மாவட்டத்தில் காதல் ஜோடிக்கு அடைக்கலம் தந்த உறவினரின் வாகனத்தை பெண்ணின் தரப்பினர் தீயிட்டு எரித்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே எலத்தூர் கரட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த தர்ச்சனாவும் காதலித்து வந்துள்ளனர். பிரபு ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தர்ச்சானாவை கடந்த 15ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே பிரபு, தர்ச்சனாவை திருமணம் செய்து கொண்டு ஏலூரில் உள்ள தனது உறவினர் ஜெயக்குமாரின் வீட்டில் தங்க வைத்துள்ளதாக பெண் வீட்டார் அறிந்தனர். அதன்படி அங்கு சென்ற தர்ச்சனாவின் பெற்றோரும் சாய் என்ற உறவினரும், தங்கள் பெண்ணை திருப்பி அனுப்புமாறு வாக்குவாதம் செய்ததோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஜெயக்குமார் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேனை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதுகுறித்து ஜெயக்குமார் பங்களா புதுர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.