குற்றம்

இன்சூரன்ஸ் பணம் தருவதாக OTP கேட்டு பணமோசடி: தேடிப்பிடித்த போலீசார்!

webteam

மதுரையில் கட்டடத் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து திருடப்பட்ட 30 ஆயிரம் ரூபாயை காவல்துறையினர் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பரமசிவம். அன்றாடம் கிடைக்கும் ஊதியத்தில் குடும்பச் செலவு போக மிஞ்சும் சொற்பத் தொகையை தனது வங்கிக் கணக்கில் சேமிப்பது பரமசிவத்தின் வழக்கம். குழந்தைகளுக்காக சிறுகச் சிறுக பரமசிவம் சேர்த்து வைத்த பணத்தை செல்போன் வழியே திருடியது மோசடிக்கும்பல்.

பரமசிவத்திற்கு காப்பீட்டுத் தொகை வந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக செல்போனுக்கு வரும் OTP-ஐ தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். மோசடிக்காரர்களின் பேச்சை உண்மை என நம்பிய பரமசிவம் OTP நம்பரை தெரிவித்துள்ளார். உடனடியாக அவர் கணக்கில் இருந்து ரூ.30 ஆயிரம் ரூபாய் மாயமானது.

என்ன செய்வது என தெரியாமல் தவித்த பரமசிவம், தான் பணியாற்றும் கட்டடப் பொறியாளர் தாமரையிடம் உதவி கேட்டுள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் காவல்துறையிடம் புகார் அளித்தார் பரமசிவம். அவரது வங்கிக் கணக்கில் இருந்து திருடிய பணத்தை பயன்படுத்தி மோசடிக் கும்பல் ஆன்லைனில் பொருள் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இழந்த பணம் திரும்பக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் 22 நாள்கள் காத்திருந்தார் பரமசிவம். இந்நிலையில் பரமசிவத்தின் பணத்தை காவல்துறையினர் பெற்றுக்கொடுத்துள்ளனர். வேறு வழிகளில் பணம் திருடப்பட்டிருந்தால் அதை மீட்பது கடினம் எனக் கூறியுள்ள காவல்துறையினர் செல்போன்கள் வழியாக OTPஐ யார் கேட்டாலும் கொடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்