குற்றம்

கடலூர்: சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியின் கையை துண்டித்த நபர் கைது

kaleelrahman

மனைவியின் கையை துண்டாக வெட்டிய காதல் கணவர் கைது செய்யப்பட்டார்.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சேத்தியாதோப்பை அடுத்துள்ள ஆணைவாரி நல்லதண்ணி குளத்தைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி சஞ்சைகாந்தி (35). இவரும் விருத்தாசலம் ஜெயில் தெருவைச் சேர்ந்தவர் சத்தியவதி, (30) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்ளுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததால் சத்தியவதி, விருத்தாசலத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் ஒரு வருடமாக வசித்து வந்தார். நேற்று இரவு அங்கு வந்த சஞ்சைகாந்தி, சத்தியவதியை தன்னுடன் சேர்ந்துவாழ அழைத்துள்ளார். அதற்கு சத்தியவதி உடன்படாததால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


இதில் ஆத்திரமடைந்த சஞ்சைகாந்தி, தான் மறைத்து வைத்திருந்த கொடுவாள் கத்தியால் மனைவின் கை மற்றும் தலை பகுதியில் பலமாக தெருவில் ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார். இதில் சத்தியவதியின் கை துண்டானது. உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து சஞ்சைகாந்தியை தேடியபோது தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மனைவியின் கையை காதல் கணவர் துண்டாக வெட்டிய சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.