கொலை வழக்கு
கொலை வழக்கு கே ஆர்.ராஜா
குற்றம்

முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்த சப்-இன்ஸ்பெக்டர் மகள்! 1 வருடத்திற்கு பிறகு வெளிவந்த பகீர் உண்மை!

PT WEB

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவரது மனைவி கொளஞ்சியம்மாள் (55), மகன் வேல்முருகன். வேல்முருகனுக்கு கீதா(33) என்ற மனைவியும், அகிலேஷ்வர்(12), சரவணகிருஷ்ணன் (6) என இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி கொளஞ்சியம்மாள் தனது வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார். அதனை சுப்ரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணகிருஷ்ணன் ஆகியோர் சாப்பிட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மகள்

அவர்கள் மட்டுமல்லாமல் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் நித்தீஷ்வரன் (8), மகள் பிரியதர்ஷினி (4) ஆகிய சிறுவர்களும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட பின் கொளஞ்சயம்மாளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அவரது கணவர் சுப்ரமணியன், சிறுவர்கள் சரவணகிருஷ்ணன், நித்திஷ்வரன், பிரியதர்ஷனி ஆகியோருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது.

8 வயது சிறுவன் உட்பட 3 பேர் பலி!

வாந்திபேதி எடுத்தவர்களுக்கு அருகில் இருந்த கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. சிகிச்சையில் சிறுவர்கள் சரவணகிருஷ்ணன் மற்றும் பிரியதர்ஷினி இருவரும் உயிர் தப்பினர்.

விருத்தாசலம் காவல் நிலையம்

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சியம்மாள், ஜனவரி 4-1-2022அன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சுப்ரமணியனும், 5 - 1 - 2022 அன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவர்களைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பக்கத்து வீட்டு நித்திஷ்வரன் என்கிற 8 வயது சிறுவனும், 12-1 - 2022 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 வருடத்திற்கு தொடங்கப்பட்ட விசாரணை!

ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கொலை வழக்கு

அந்த வழக்கு விசாரணையின் முடிவில் வேல்முருகனின் மனைவி கீதா, விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஹரிஹரன் (43) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த அவருடைய மாமியார் கொளஞ்சியம்மாள், அப்போது வெளிநாட்டில் இருந்த தன்னுடைய மகன் வேல்முருகனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, தங்களுடைய உறவுக்கு மாமியார் இடையூறாக இருந்ததால் ஆத்திரத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்ததாக கூறப்படுகிறது.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் மகள்!

இது குறித்து மங்கலம்பேட்டை காவல் துறையினர் நடத்தி வந்த விசாரணையில் ஒரு வருடத்திற்கு பிறகு துப்பு துவங்கியதால் கொலை வழக்காக மாற்றி, கீதாவையும் அவருடன் திருமணத்துக்கு மீறிய உறவில் இருந்த ஹரிகரனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவனை பெண்ணொருவர் கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கீதா ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பூமாலை என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.