குற்றம்

கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை

Sinekadhara

விருத்தாசலத்தில் நடந்த கண்ணகி - முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் மருதுபாண்டி என்பவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 பேருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் கண்ணகி ஆகியோர் 2003-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விவரம் தெரிந்த குடும்பத்தார் இருவரையும் சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று அங்கு காது மற்றும் மூக்கு வழியாக விஷத்தை செலுத்தி இருவரையும் கொலை செய்து, உடல்களை தனித்தனியாக எரித்திருக்கின்றனர். முதலில் நடவடிக்கை எடுக்காத போலீசார் ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி, ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போதைய விருத்தாசலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகிய 15 பேர் குற்றவாளிகளாக உறுதிசெய்யப்பட்டனர். அதில் குணசேகரன் மற்றும் அய்யாசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

இன்று குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 13 பேருக்கும் தண்டனை விவரங்களை கடலூர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. அதன்படி, முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருக்கிறது. மீதமுள்ள 12 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.