குற்றம்

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.. காவல்நிலையத்தில் களைகட்டிய கொண்டாட்டம்

Sinekadhara

9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பை கொண்டாடும் விதமாக மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்லி காவல்நிலையத்தை வியாழக்கிழமை இரவு ஒரு சிறப்பு நிகழ்ச்சி போல் அலங்கரித்து போலீசார் கொண்டாடினர்.

ஏப்ரல் 26,2019 அன்று, தனது 9 வயது மகளை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட தந்தை புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீஸார் உடனே குற்றவாளிகளை கைது செய்து, அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்திய தண்டனை சட்டம்(ஐபிசி) பிரிவு 376 மற்றும் போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை அறிவித்து தீர்ப்பளித்துள்ளது.

சிறுமிக்கு இந்த வழக்கில் நீதி வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் சிக்லி காவல் நிலையத்தை சிறப்பு நிகழ்ச்சிபோல் அலங்கரித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.