குற்றம்

திருவள்ளூர்: கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கிடையே மோதல் - வடமாநில மாணவர் கொலை

kaleelrahman

திருவள்ளூரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். வெள்ளவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுசத்திரம் அருகே ஜமீன் கொரட்டூர் பகுதியில் தனியார் இன்டர்நேஷனல் மெரைன் கப்பல் கல்லூரி உள்ளது. இங்கு, நேற்று இரவு நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இறுதியாண்டு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஆதித்ய ஷர்மா (20) என்ற மாணவனை சேர் (பிளாஸ்டிக் நாற்காலியின்) கால் பகுதியை உடைத்து சக மாணவர்கள் குத்தியதில் அவர் சரிந்து விழுந்துள்ளார்.

இதனையடுத்து மாணவனை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்ற போது மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல் துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வெள்ளவேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சண்முகப்பிரியா நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் யார் கொலை செய்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கல்லூரி மாணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.