விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் உறவினர்களை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் காண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் சந்தியாவை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் தெருவை சேர்ந்த மாரியப்பனுக்கு 30 சவரன் நகை வழங்குவதாக பேசி அப்போது 25 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொடுத்து மணமுடித்து வைத்துள்ளார். மீதமுள்ள 5 சவரன் நகையை கேட்டு மாரியப்பன் மற்றும் அவரது பெற்றோர்கள் சந்தியாவை கடந்த 26ம் தேதி கடுமையாக தாக்கியதோடு கயிற்றில் கட்டி தூக்கில் ஏற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சந்தியாவை மீட்டு தற்பொழுது மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். சந்தியா தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கிய கணவன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் மனு அளித்தனர்.
மேலும் இது குறித்து ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சம்பவம் நடந்த தினத்தில் புகார் அளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறையினர் அலட்சியம் கட்டுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.