குற்றம்

ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: மேற்கு வங்கம் விரைந்த தனிப்படை

நிவேதா ஜெகராஜா

சென்னை ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மாணவர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் மேற்கு வங்கத்திற்கு சென்றுள்ளது.

சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் மாணவி 2017ம் ஆண்டு முதல் தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது பேராசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், மனவேதனையில் இருந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2021 ஜூன் 9ம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் ஒன்பது மாதம் ஆகியும் இதுவரை இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இந்த வழக்குக்கும், இதில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கண்டனத்தை தொடர்ந்து கடந்த 22ம் தேதி மாணவி மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து மாதர் சங்கத்தினர் புகாரும் அளித்தனர். தங்களது புகாரில், `இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் தேடி தனிப்படை போலீசார் மேற்குவங்கம் விரைந்துள்ளனர். மேலும் மயிலாப்பூரில் காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.