குற்றம்

போலியான படத்தை பதிவேற்றி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

kaleelrahman

சமூக வலைதளத்தில் போலியான புகைப்படத்தை பதிவேற்றி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த நியாஸ் என்பவர், இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இதில், இவருடன் பழக்கமான திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி கல்லூரி மாணவியிடம் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், புகைப்படங்களை பெற்ற நியாஸ் அதை மார்பிங் செய்து ஆபாச படமாக மாற்றி அதை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும் இல்லை என்றால் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனையடுத்து கல்லூரி மாணவி திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.

இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கிரைம் தொழில்நுட்ப உதவியுடன் குற்றச்செயலில் ஈடுபட்ட நியாசை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.