குற்றம்

கோவையில் கட்டுக்கட்டாக சிக்கிய போலி 2000 ரூபாய் நோட்டுகள்.. கோவில் கலசமும் பறிமுதல்

PT

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது அங்கு கட்டு கட்டாக 2000 ரூபாய் போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகரைச் சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப் மற்றும் 4 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஜடகோபால் என்ற நபரை தேடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருடியம் இருப்பதாகச் சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.