கோவை ஆலாந்துறை அரசுப் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், 11 ஆம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை ஆலாந்துறை அரசுப் பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவர்களில், 2 பிரிவினர் இடையே வாக்குவாதம் நடந்ததாக தெரிகிறது. அப்போது இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் உட்பட 2 பேர், மூன்று மாணவர்களை கத்தியால் குத்தியுள்ளனர்.
இதில், காயம் அடைந்த 3 மாணவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், ஆலாந்துறையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் நந்தகுமாருக்கு தலை, கழுத்து, நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை போலீசார், 17 வயது முன்னாள் மாணவர் உட்பட இருவரை கைது செய்து விசாரணைக்கு பின் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சையில் இருந்த நந்தகுமார் சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.