குற்றம்

கோவை: பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக ஆண் நண்பர் கைது

கோவை: பெண்ணின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக ஆண் நண்பர் கைது

kaleelrahman

கோவையில் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாக கல்லூரி ஆண் நண்பர் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன் (23). இவர், கோவையில் தங்கி அரசுக் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அப்போது, அதே கல்லூரியில் ஒன்றாக படித்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையேயான செல்போன் உரையாடலின் போது கோபிநாதன் அந்த இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ காலில் வரச்சொல்லி அதனை தனது செல்போனில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அப்பெண்ணிற்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்துள்ளார். இதையறியாமல் அப்பெண்ணும் அவருடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோபிநாதனும் அந்த பெண்ணிடம் பேச பல்வேறு வழிகளில் முயன்றும் முடியவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கோபிநாதன் தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபிநாதனை கைது செய்தனர்.