குற்றம்

கோவை: மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு - விஷம் வைத்து கொலை செய்தது விசாரணையில் அம்பலம்

kaleelrahman

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த விகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்பகை காரணமாக விஷம் வைத்து கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேரும் கடந்த 4 ஆம் தேதி தீபாவளியன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தனர். இதையடுத்து 3 பேரின் உடல்களை கைபற்றி பந்தய சாலை காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இரவு முழுவதும் மது குடித்த அவர்கள் காலை 6.30 மணிக்கு மீண்டும் பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்த நிலையில், அடுத்தடுத்து மயங்கி சாலையில் விழுந்தனர். இதையடுத்து மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இந்நிலையில், உடல்கள் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், விஷம் இருந்த தடயம் கண்டறியபட்டது. இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.