குற்றம்

கோவை: பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்ற கணவர் உட்பட 3 பேர் கைது

webteam

கோவையில் திருமணத்தை மீறிய உறவால் பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கணவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும் சாய் சர்வேஷ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதரன் தனது குடும்பத்தினருடன் அன்னூர் மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள செந்தாம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் ஸ்ரீதரனுக்கும், அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறிய நிலையில், மனைவி கீர்த்தனா கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த ஸ்ரீதரன் கீர்த்தனாவை தாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் கணவர் உட்பட 3 பேர் தனக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றதாக கீர்த்தனா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஸ்ரீதரன் மற்றும் அவரது காதலி ரம்யா, இவர்கள் இருவருக்கு உதவிய நண்பர் பழனி ஆகிய 3 பேரும் சேர்ந்து கீர்த்தனாவுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதரனை போலீசார் கைதுசெய்து தலைமறைவான ரம்யா மற்றும் பழனியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், ரம்யா, பழனி ஆகிய இருவரும் கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜே.புதூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற அன்னூர் போலீசார், ரம்யா, பழனி ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.