குற்றம்

கோவை: ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.61 லட்சம் மோசடி – கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

webteam

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் 61 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை கேகே.புதூரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அவிநாசி சாலையில் SHRENA PROPERTIES என்ற பெயரில் நிறுவனம் வைத்து ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். ஏக்கர் அளவுகளில் வீடு கட்டி அவற்றை விற்பனை செய்தும் வருகிறார். இந்நிலையில், தொழில் ரீதியாக அவருக்கு 2012 முதல் நன்கு பழக்கமான குணசேகரன், வேலுமணி ஆகியோர் சுரேஷ் என்ற நபரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுரேஷ், கோவை பாப்பாம்பட்டியில் உள்ள சுமார் 35 ஏக்கர் நிலத்தில் தனக்கு, ஒப்பந்தம் செய்து வீடு கட்டி விற்று வரும் லாபத்தில் சரிபாதியாக பிரித்துக் கொள்ளாலாம் என குணசேகரன், வேலுமணி ஆகியோர் மூலம் வெங்கடேசனுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதனை நம்பிய வெங்கடேசன் சுரேஷின் வங்கிக் கணக்கிற்கு ரூ.64 லட்சம் ரூபாய் பணத்தை போட்டுள்ளார். ஆனால், அதன்பிறகே இடம் சுரேஷ் என்பவருடையது என நம்பவைத்து பொய் கூறி கூட்டுசதி செய்து ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது.

சுரேஷிடம் பணத்தை திருப்பித் தரும்படி வெங்கடேசன் கேட்ட்டுள்ளார். அப்போது சுரேஷ் செக் கொடுத்துள்ளார். அதனை வங்கியில் செலுத்தியபோது பணமில்லை என தெரியவந்துள்ளது. இதுநாள் வரை மொத்தம் மூன்று லட்சத்தை மட்டுமே திருப்பி கொடுத்துள்ளதாகவும், 61 லட்சம் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதோடு சுரேஷ், குணசேகரன், வேலுமணி ஆகிய மூவரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாநகர குற்றப் பிரிவு காவல்துறையினர் மூவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.