குற்றம்

அறையை சுத்தம் செய்யவந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்க முயன்ற வருமானவரித்துறை அதிகாரி கைது

webteam

அலுவலக அறையை சுத்தம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்ற வருமானவரித்துறை மூத்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஆண் மற்றம் பெண் அதிகாரிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த அலுவலகத்தில் கடந்த 12 வருடமாக மூத்த வரி விதிப்பு அதிகாரியாக அண்ணா நகரைச் சேர்ந்த ரெக்ஸ (36) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இதே அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த கணவனை இழந்த 34 வயது பெண் ஒருவர் கடந்த ஆறு வருடங்களாக அலுவலக சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி ரெக்ஸ் தனது அறையை சுத்தம் செய்ய வருமாறு அந்தப் பெண்ணை அழைத்து திடீரென அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த அந்தப்பெண் அலறியபடி அறையை விட்டு ஓடியுள்ளார்.

இது குறித்து வருமானவரித் துறை அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால், உயர் அதிகாரிகள் பெண்ணின் புகாரை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதனை பெரிது படுத்த வேண்டாம் எனவும் பெண்ணிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண், கடந்த 15ஆம் தேதி வீட்டில் உள்ள எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரின் அடிப்படையில், ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் பெண் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூத்த வரி விதிப்பு அதிகாரி ரெக்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.