குற்றம்

சீர்காழி: கோயிலுக்கு சென்ற சிறுமியை கேலி செய்த இளைஞர்கள்; இரு தரப்பினரிடையே கடும் மோதல்

webteam

சீர்காழி அருகே கோயிலுக்கு வந்த சிறுமியை கேலி செய்ததால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர். இதையடுத்து மூவரை கைது செய்த போலீசார் ஆறு பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மாதானம் கிராமத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. நேற்று மாலை இக்கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தாயுடன் வழிபாட்டிற்காக வந்துள்ளார். அப்போது இளைஞர்கள் சிலர் அப்பெண்னின் மீது தண்ணீரை பீச்சு அடித்து கேலி செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அப்பெண்ணின் தாயார் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடம் தெரிவித்துள்ளார். இதனை தட்டிக்கேட்டதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக உருவானது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்களின் இரண்டு கடைகளை மற்றொரு தரப்பினர் இடித்து தரைமட்டமாக்கினார்.இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த புதுப்பட்டினம் போலீசார் மாதானம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சூரியமூர்த்தி, முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்ததுடன் தலைமறைவான சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.

இதையடுத்து 17 வயது சிறுமியை கேலி செய்ததாக மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.