குற்றம்

சென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன?

சென்னைச் சிறுமி பாலியல் வன்கொடுமை: 7 மாதங்களாக நடந்தது என்ன?

webteam

பெண் குழந்தைகளை பெற்ற ஒவ்வொருவரையும் கலங்க வைக்கும் அளவுக்கான கொடூரம் சென்னையில் நடந்துள்ளது. ஏழு மாதங்களாக சிறுமிக்கு துன்புறுத்தல்கள் நேர்ந்ததற்கு முக்கிய காரணம் சிறுமி யாரிடமும் சொல்ல பயந்ததுதான். 

ஜனவரி 16 ஆம் தேதிதான் சிறுமி முதல்முறையாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். தனக்கு நேர்ந்த அனைத்தையும் தெளிவாக கூறும் அளவுக்கு தெளிவான நினைவாற்றலுடன் இருக்கிறார். சிறுமியை லிப்டிற்குள் அழைத்துச்சென்று, எட்டாவது மாடியில் லிட்டை பூட்டிய பின் ரவிக்குமார் தனது பேத்தி வயதுள்ள சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தெரிகிறது.

வெகுளித்தனமாக அனைவரிடமும் கலகலப்பாக பேசி, விளையாடக்கூடிய குணம் கொண்ட சிறுமிக்கு இதனை ஒரு விளையாட்டு என்று கூறி பழக்கியதாக தெரிகிறது. பத்து ஆண்டுகளாக அதே இடத்தில் லிப்ட் ஆப்ரேட்டராக வேலை செய்வதால் அவர் மீது நம்பிக்கையும் வயதானவர் என்ற பச்சாதாபமும் இருப்பதை ரவிக்குமார் சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

காது கேட்காத மாற்றுத்திறன் இருப்பதை சாதகமாக எடுத்துக்கொண்ட லிப்ட் ஆப்ரேட்டர் ரவிக்குமார், சக லிப்ட் ஆப்ரேட்டர்கள், காவலாளிகள் என அடுத்தடுத்து மற்றவர்கள் சிறுமியை தவறாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொ‌டுத்துள்ளார்.

முதலில் விளையாட்டு என்று நினைத்த சிறுமிக்கு போகப்போக அச்சமும், பயமும் ஏற்பட சிறுமியை இந்த கும்பல் மிரட்டத்தொடங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ய லிப்ட் மட்டுமின்றி, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகள், நடமாட்டம் அற்ற மொட்டை மாடி போன்ற இடங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

சிறுமிக்கு வலி தெரியாமல் இருக்கவும், பெற்றோரிடம் புகார் கூறாமல் இருப்பதற்காகவும், மயக்க ஊசி, போதை மருந்து, பிரசவத்தின்போது பயன்படுத்தப்படும் மருந்துகள் என அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. வயிற்றிலும், தொடைப்பகுதியிலும் தனக்கு ஊசி போட்டதாக சிறுமியே தெரிவித்துள்ளார்.

12 வயதாகும் வெகுளியான சிறுமியை பெண்ணாக பார்க்கத் துணிந்தது எப்படி? ஓடி விளையாடி சிரித்து மகிழ்ந்த சிறுமியை சிதைக்க மனம் வந்தது எப்படி? சிறுமியை வெறும் பெண்ணுடலாக பார்த்து பயன்படுத்த துணிந்த வக்கிர மனம் வந்தது எப்படி? தாயாகவும், மனைவியாகவும், மகளாகவும் சூழ்ந்திருக்க குடும்பமாக வாழும் இவர்கள் அப்பாவி சிறுமியை ‌பாலியல் கொடுமை செய்த கொடூரத்தை என்னவென்று சொல்வது ?