குற்றம்

`மருத்துவர் இல்லாததால் செவிலியர்களே பிரசவம் பார்ப்பு’-குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சி

webteam

அலமாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சோழவரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அலமாதி பகுதியை சேர்ந்தவர் மித்ரா (20). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டபோது இரவுப் பணியில் மருத்துவர் இல்லாத நிலையில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

இதில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. மேலும் ரத்தப்போக்கு அதிகரித்ததால் சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இறந்து பிறந்த ஆண் சிசுவின் சடலத்தை பெற்று சென்ற உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அலமாதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர், செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.