குற்றம்

நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி

Sinekadhara

நீதிபதிகள் நியமனத்தை விமர்சித்து பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அரசு தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி பேசி இருந்தார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவாலேயே பதவிக்கு வருகிறார்கள் என்பதைபோல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு
இருந்ததாகவும், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மாண்பை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதால் அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தொடர அனுமதி
கேட்டு வழக்கறிஞர் ஆன்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை நீதிபதி விஜய் நாராயணனிடம் மனு அளித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து அவர் எடுத்துள்ள முடிவில், நீதித்துறையின் மாண்பை குலைக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி பேசியது உறுதியாகி உள்ளதாக
குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு குறித்து விசாரணை நடத்த உகந்த வழக்கு என்பதால் அதற்கு அனுமதி அளிப்பதாக தன் முடிவு தொடர்பான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல கடந்தவாரம் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சார்லஸ்
அலெக்ஸாண்டர், புகழேந்தி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர
அனுமதி கோரி வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு கொடுத்துள்ளார்.