குற்றம்

பிரியாணிக்கு காசு கேட்டதால் கத்தியை காட்டி மிரட்டல்-வேறொரு வழக்கில் வசமாக சிக்கிய ரவுடிகள்

Veeramani

சென்னையில் பிரியாணி கேட்டு தராததால் கடையை அடித்து உடைத்து கத்தியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடி இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடையை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

சென்னை கொளத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் வழக்கறிஞர் காமேஷ் என்பவர் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இந்த பிரியாணி கடையின் சூப்பர் வைசரான தயாநிதி சாலையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு மர்ம நபர்கள் இவரை வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி தயாநிதியிடமிருந்த 1200 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

இது குறித்து தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ரவுடியான செங்குன்றம் பகுதியை சேர்ந்த குமார் என்கிற வாட்டர் வாஷ் குமார்(24) மற்றும் பாடியை சேர்ந்த கோபி நாத்(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும் ரவுடியான குமார், கடந்த மாதம் 1 ஆம் தேதி இந்த பிரியாணி கடைக்கு வந்து பிரியாணி கேட்டுள்ளார். இதற்கு ஊழியர்கள் பணம் கேட்டதற்கு தகராறில் ஈடுபட்டு கத்தியை எடுத்துகாட்டி மிரட்டி, கடையிலிருந்த கண்ணாடி மற்றும் பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது.

பிரியாணி கடையில் ரவுடி குமார் கத்தியுடன் பொருட்களை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.