குற்றம்

சென்னை: ரயிலில் கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது

சென்னை: ரயிலில் கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது

kaleelrahman

ரயிலில் கடத்த முயன்ற ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரயிலில் கஞ்சா கடத்திச் செல்பவரை கைது செய்ய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் மதுசூதனன் ரெட்டி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் கையில் பையுடன் சென்றனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் டி கால் மற்றும் சமந்தா பிரதான் ஆகியோர் என தெரியவந்தது.

இதையடுத்து இவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில், உலர்ந்த கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இவர்கள் பையில் வைத்திருந்த 9.7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த கஞ்சாவை யாரிடம் கொடுக்க 2 பேரும் சென்றனர்? எப்படி இவர்களுக்கு கிடைத்தது? என பல்வேறு கோணங்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு லட்சத்து 94 ஆயிரம் மதிப்புடையது என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கேரளா மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லக்கூடிய டாட்டா எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை பெரம்பூர் பகுதியிலிருந்து புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது பணியாளர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது டி2 பெட்டியில் கேட்பாரற்று ஒருபை கிடந்தது. இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பையை திறந்து பார்த்தனர்.

அப்போது ஒரு லட்சத்து 42 ஆயிரம் மதிப்புள்ள 7.1 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை கடத்தி வந்தது யார் என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.