குற்றம்

சென்னை டூ இலங்கை: மெத்த பெட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்ற 2 பேர் கைது

kaleelrahman

செங்குன்றத்தில் 4 கிலோ கொக்கைன் போதைப்பொருளை கடத்த முயன்ற 2 பேரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் கொக்கைன் போதைப்பொருளை சிலர் கடத்திச் செல்வதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செங்குன்றம் காவாங்கரை பகுதியில் கண்காணித்தனர். அப்போது பைக்கில் சென்ற 2பேரை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் 4 கிலோ மெத்த பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் செங்குன்றத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கணேஷ் என்பது தெரிந்தது.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 2 பேரும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த குற்றப்புலனாய்வு போலீசார், அதன் மதிப்பு இந்திய ரூபாயில 13 லட்சம் இருக்கும் என தெரிவித்தனர். பின்பு அவர்கள இருவரையும் மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

2 பேரையும் கைது செய்த மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், அவர்களிடம் போதைப்பொருளை யார் கொடுத்தது? எப்படி இலங்கைக்கு கடத்த உள்ளீர்கள்? கூட்டாளிகள் யார்? எங்கு இருக்கிறார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.