குற்றம்

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தனியார் பள்ளி வேன் உதவியாளர் போக்சோவில் கைது

webteam

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி வேன் உதவியாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த மூன்றரை வயது சிறுமி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். சிறுமி தினமும் டிராவல்ஸ் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, சிறுமிக்கு யாரோ பாலியல் தொல்லை கொடுத்திருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். பின்னர் சிறுமியை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரது புகைப்படத்தையும் காட்டி விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சிறுமியை அழைத்து செல்லும் வேனின் உதவியாளர் சத்யராஜ் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் சத்யராஜை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.