செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இளம்பெண் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இளம் பெண்ணின் வாயை பொத்தி இழுத்துச் சென்றுள்ளார். அப்போது இளம் பெண் கூச்சலிட்டதால் அந்த நபர் தப்பியோடி உள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து உடனடியாக துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் (24), என்பதும் குடிபோதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை, தெரியாமல் செய்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்" என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார், அவர் மீது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.