குற்றம்

சென்னை: "நீட் மார்க் இதானே? சரி 40 லட்சம் கொடுங்க, ஓமந்தூரார்ல சீட் வாங்கலாம்!"

webteam

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.40 லட்சம் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த முருகையன் (61) என்பவரது மகன் தினேஷ் குமார். இவர், 2019 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியைச் சேர்ந்த சபரி (36), போரூர் டி.வி.ஏ கோயில் தெருவைச் சேர்ந்த ஷாம் கிதியோன் (38) ஆகியோர் முருகையனை சந்தித்து தினேஷ் குமார் நீட் தேர்வில் 116 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகவும் கூறி வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் முருகையனிடம் இருந்து ரூ.40 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு, அவரது மகனுக்கு கல்லூரியில் இடம் வாங்கித் தராமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றியுள்ளனர். இதைத்தொடர்ந்து முருகையன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து சபரி, ஷாம் கிதியோன் ஆகிய இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.