சென்னை அயனாவரத்தில் காவலரை வெட்டிய ரவுடி, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கஞ்சா விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கர் என்ற ரவுடி, நியூ ஆவடி சாலை அருகே தஞ்சமடைந்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.
இதனையறிந்த சங்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். உடனே காவலர்கள் சங்கரை சுற்றிவளைத்தனர். அப்போது, அங்கிருந்த காவலர் முபாரக்கை, அரிவாளால் வெட்டிவிட்டு சங்கர் தப்பிக்க முயன்றார். இதனால் தற்காப்புக்காக, காவல் ஆய்வாளர் நடராஜன், ரவுடி சங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில், காயமடைந்த சங்கர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட சங்கரின் உடல் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவலர் முபாரக்கும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தை காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். காவல்துறை இணை ஆணையர் சுதாகர் சம்பவம் குறித்து காவலர் முபாரக்கிடம் கேட்டறிந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சங்கர் மீது கொலை, கொலைமுயற்சி, மாமூல் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.