பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் கைது. 12 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை காவல்நிலைய, எல்லை பகுதியில், பழைய பெருங்களத்தூர், முடிச்சூர், வெங்கம்பாக்கம், மேற்கு தாம்பரம், கிஷ்கிந்தா சாலை என, நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த, 10 நாட்களில், ஐந்து திருட்டு, சம்பவங்கள் நடந்தன. தொடர்ச்சியாக நடந்த, இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க, பீர்க்கன்காரணை போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், விசாரித்து வந்த நிலையில், பம்மலை அடுத்த அனகாபுத்தூரில் உள்ள, ஒரு அடகு கடையில், திருடிய நகைகளை அடகு வைக்க முயன்ற குன்றத்தூர், தண்டலம், இரண்டாம் கட்டளையைச் சேர்ந்த, சதீஷ் (19), பஷீர் அகமது (20), ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த, மணிகண்டன் (20), ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பீர்க்கன்காரணை காவல்நிலைய எல்லையில், கடந்த, 10 நாட்களில் நடந்த, ஐந்து திருட்டு சம்பவங்களிலும், இவர்கள் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அவர்களை, கைது செய்த போலீசார், 12 சவரன் தங்க நகைகள், இரண்டு மடிக்கணினி, இரண்டு ‛யமஹா' இருசக்கர வாகனம் ஒரு ‛கே.டி.எம்.,' இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.