குற்றம்

சென்னை: பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகளுக்கு கடுங்காவல் சிறை தண்டனை

webteam

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 3 சவரன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த 25 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கத்தியைக்காட்டி மிரட்டி 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதாக கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் மீது கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், குற்றம் சாட்டப்பட்ட அறிவழகன் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.