குற்றம்

சட்டவிரோத கேளிக்கை நிகழ்ச்சி - நடவடிக்கை எடுத்த சென்னை போலீஸ் குறித்து ஆபாசமாக பேசிய டிஜே!

Veeramani

உலகப் புகழ்பெற்ற பிரேசில் நாட்டை சேர்ந்த டிஜே மந்திராகோரா, சென்னையில் நடத்திய டிஜே நிகழ்ச்சிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த சென்னை போலீசாரை ஆபாசமாக சமூகவலைதளத்தில் வசைபாடி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபலமான தனியார் மாலில், தி கிரேட் இந்தியன் கேதரிங்கஸ் என்ற பெயரில் டிஜே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் ஐடி கம்பெனி ஊழியர் பிரவீன் என்பவர் அளவுக்கதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தார். அவர் போதைப்பொருள் பயன்படுத்தினாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த டிஜே நிகழ்ச்சிக்கும் போலீஸாரிடம் முன் அனுமதி பெறவில்லை, அதேபோன்று டிஜே நிகழ்ச்சி என்ற பெயரில் மது விருந்தையும் காவல் துறைக்கு தெரியாமல் சட்டவிரோதமாக நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக உரிமமே இல்லாமல் தனியார் மாலில் மங்கி பார் என்ற தனியார் பார் இயங்கி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்து அந்த பாருக்கு சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெறாமல் இந்த டிஜே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தனியார் மேலாளர்கள் நிகாஷ் போஜராஜ், பாரதி, பார் ஊழியர் எட்வின் ஆகியோரை அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள மூன்று பேரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். பிரபல மாலில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால், தனியார் மாலின் உரிமையாளரையும் விசாரணை நடத்தி அவரையும் வழக்கில் சேர்க்க போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

டிஜே நிகழ்ச்சியில் போலீசார் நடத்திய நடவடிக்கைக்கு சமூகவலைதளத்தில் டிஜே நிகழ்ச்சி ஆதரவாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டிஜே மந்திராகோரா, சென்னை போலீசாரை அருவருக்கத்தக்க ஆபாச வார்த்தைகளால் வசை பாடி உள்ளார்.

டிஜே நிகழ்ச்சி ஆதரவாளர்களும் சென்னை போலீசை அருவருக்கத்தக்க வார்த்தைகளை சமூகவலைதளத்தில் வசை பாடி வருகின்றனர். ஏற்கனவே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், போலீசாரை ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைத்தளத்தில் வசை பாடி வருபவர்களை, அவர்களுடைய சமூக வலைதள ஐடியை வைத்து காவல்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது